Monday 25 December 2017

திற்பரப்பு அருவி


  கிறிஸ்துமஸ் தினமான இன்று காலை மகன்களுடன் குமரி குற்றாலமான திற்பரப்பு அருவிக்கு காலைகுளியலுக்கு சென்றோம் .

காலை தொழுகைக்கு வடசேரி பள்ளிவாசலுக்கு கால்நடையாக சென்று திரும்பி வர மணி ஆறரை ஆகிவிட்டது .நேற்றிரவே சாலிமும்,சல்மானும்  குளியல் ஆடைகளை எடுத்து வைத்துவிட்டே படுக்கைக்கு சென்றனர் .
Add caption


  திற்பரப்பு ,திற்பரப்பு என சொன்னதுமே சல்மான் எழுந்துவிட்டான் ,சாலிம் துயில் கலைய தாமதமாகிவிட்டது .ஏழு நாற்பதுக்கு எனது சுசுகியில் புறப்பட்டோம் .


  ஒரு மணிநேர பயணம் .நாகர்கோயில் திற்பரப்பு முப்பதைந்து கிலோமீட்டர் .விடுமுறைதினம்  ஆதலால் சாலையில் அதிக நெருக்கம் இல்லை .தக்கலையிலிருந்து பத்மனபாபுரம் அரண்மனை ,சித்திரங்கோடு குலசேகரம் வழியாக அடர் காட்டுக்குள் பயணிப்பது போல  உணர்வு .காலை குளிரை சல்மானால் தாங்கஇயலவில்லை .ஒகி  புயலில் சாய்ந்த மரங்கள் வழிநெடுகிலும் கிடக்கறது .

  திற்பரப்பு அருவியில் மிகையாக தண்ணீர் கொட்டுகிறது,பாதுகாப்பு கம்பிகளுக்கு சற்று வெளியே தண்ணீர்  .அருவியை சுற்றிலும் நீர் திவலைகள் ஐந்தடி மேல் எதுவும் தெரியவில்லை .அதிக திரள் இல்லை உற்சாக குளியல் ஒரு மணிநேரம்.விசையுடன் கொட்டும் தண்ணீருக்கடியில் ஒரு நிமிடத்திற்கு மேல் நிற்க்கவியலவில்லை நல்ல இயற்கை மசாஜ். சாலிமும் ,சல்மானும் அங்கிருந்து நீச்சல்குளத்தில் விடையாட சென்றனர் .
கையில் டீபுடன்  சாலிம்



  பத்தரை மணிக்கு அருவியிலிருந்து வெளியேறுகையில் நல்ல திரள் ,மேலும் மக்களும் ,வாகனங்களும் வந்துகொண்டே இருந்தனர் .

   இங்குள்ள  சிறுவர் பூங்காவில் சல்மான் சிறிதுநேரம் விளையாடினான் .உணவருந்தும் இடமும்,
ஆண் ,பெண் ஆடை மாற்ற இடமும் இங்கு உள்ளது .


   ஆடைமாற்றியதுமே  சல்மான் வாப்பா ,பசிக்குது ,பசிக்குது என்றான் .வெளியில் வந்து பிராதன சாலையில் இருந்த உணவகத்தில் நிறுத்தினேன் சாலிம் வாப்பா இது சுத்தமாக இல்லை நான் சாப்பிட வரவில்லை என்றான் .

இங்கு இப்படிதான் இருக்கும் ஓடல்  இங்கே கிடையாது என்றேன் .இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஹோட்டல் கங்கா பலகையை கண்டு நிறுத்தினேன் .

தோசையும் ,பரோட்டாவும் இருந்தது ,வெகுநாட்களாகிவிட்டது  பரோட்டா சாப்பிடுவதில்லை .தோசை என்றேன்  (கல் தோசை )அறுபது வயதை தாண்டிய ஒரு அம்மாவும் அவரது மகளும் அந்த சிறிய உணவகத்தை நடத்துகின்றனர் .

அந்த அம்மையார் கறிவிடட்டா மக்களே என்றார் என் மகன்கள் புரியாமல் விழித்தனர் .வாப்பா இது என்ன கறி  தீயல் மக்களே சாப்புடு என்றேன் .சாம்பார் இல்லையா முடிஞ்சது மக்களே என்றார் .சம்பந்தி விடட்டா என கேட்டு சட்னி கொடுத்தார் .

   பாட்டி .புரோட்டா வேணுமா ,வேண்டாம் அம்மச்சி என்றேன் .வெள்ளம் வேணுமா ,பச்சவெள்ளமா ,சூடுவெள்ளமா சல்மான் மீண்டும் புரியாமல் விழிக்க அந்த அம்மையார் குடிக்க தண்ணி வேணுமா என கேட்டார் . சல்மான் டபுள் புல்சை வேண்டுமென்றான் அணைந்திருந்த விறகடுப்பை கொஞ்சம் காய்ந்த ஓலையால் பத்தவைத்து புல்சையும் ,சாலிம்க்கு ஆம்ப்லேட்டும் போட்டு தந்தனர் .

   அன்பான உபசரிப்பு இருவரும் என்ன படிக்கிறார்கள் என கேட்டனர் .மூன்று பேருக்கும் பனிரெண்டு தோசை ,ஒரு டபுள் புல்சை ,டபுள் ஆம்ப்லேட் மொத்தம் எண்பத்திஎட்டு ரூபாய் .சமீபத்தில் இவ்வளவு மலிவாக எங்கும் சாப்பிட்டதே இல்லை .அம்மச்சி எத்ற வருசமாட்டு கடையை நடத்துதீயே என கேட்டேன் கொஞ்சம் அப்பறம் சொந்த கடை ,இது வாடகையாக்கும் .அது என்னாச்சி அம்மச்சி  அத மொவனுக்கு கொடுத்தாச்சி .மொத்தம் எல்லாம் இருவத்திமூணு வருசமாச்சி என்றார் .
  
  வில்லுக்குறி தாண்டி தோட்டியோடுக்கு முன் நொங்கு சர்பத் குடிக்க நிறுத்தினேன் .ஒரு கப் ஐம்பது ரூபாய் என்றார், அக்கா நாற்பது தானே என கேட்டேன் .இல்லை என்றார் .பத்தடி தாண்டி வேறுகடையில் நாற்பதுக்கு கிடைத்தது .கடையருகில் நின்ற பனைமரத்தை படம் பிடித்தேன் ,பாதர் காட்சனுக்கு காண்பிக்கலாம் மகிழ்வார் என்றேன் .சல்மான் வாப்பா இதுதான் நொங்கு மரமா என கேட்டான் .
ஸாலிம் 
  
 
ஓஹி சாயத்துவிட்டாள்
இந்த விடுமுறைக்கு கன்னியாகுமரி செல்ல திட்டமிடுபவர்களுக்கு உகந்த பருவநிலை இது .குமரியில் அதிகாலை சூரிய உதயமும் பார்த்துவிட்டு காலையுணவிற்க்குபின் சுசீந்தரம் கோயில் .அங்கிருந்து நாகர்கோயில் நாகராஜா கோயில் பார்க்கலாம்.

பின்னர் தக்கலை பீர்முஹம்மது அப்பா தர்கா ,பத்மனபாபுரம் அரண்மனை யும் (நானூறு வருடம் பழமையானது , திங்கள்கிழமை விடுமுமுறை )அங்கிருந்து ஆசியாவின் மிக உயர்ந்த மாத்தூர் தொட்டி பாலமும்  பார்த்துவிட்டு இறுதியாக திற்பரப்பு அருவியில் நீராடி ஒரே நாளில் உடலும் 
,மனமும் தூயமைபெற்று மகிழ்வுடன் திரும்பலாம் .
  
இந்த விடுமுறைக்கு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் வருபவர்கள் தங்களுடைய தங்கும் இடங்களை உறுதிசெய்துவிட்டு  வாருங்கள் .ஜனவரி இரண்டாம் தியதிவரையில் எந்த விடுதியிலும் அறைகள் காலி இல்லை என்பது என்னுடைய போனஸ் தகவல்.
  மாமன் ,மச்சான் முன்னாள் காதலி ,பங்காளி போன்ற உறவினர்கள் இருப்பவர்கள் தங்குமிட கவலையின்றி இப்போதே புறப்படுங்கள் கன்னியாகுமரியை நோக்கி .விடுமுறை நாட்களை உற்சாகமானதாகுங்கள் .
  மேலும் வட்டகோட்டை,சொத்தவிளை கடற்கரை ,முட்டம் கடற்கரை,புலியுர்குருச்சி தேவசகாயம் பிள்ளை சர்ச் திருவட்டாறு ஆதிகேசவன் கோயில் ,சிதறால் மலை கோயில் பேச்சிபாறை ,பெருஞ்சாணி ,மாம்பழத்துறை அணைகள் என மேலும் பார்பதற்கு இடங்கள் உள்ளன 
தீயல் பற்றி அதிகமான கேள்விகள் வந்தால் அது  குறித்து 
விபரமாக பதிவிடுகிறேன் .

ஷாகுல் ஹமீது ,

25-12-2017

Friday 22 December 2017

சுரேசுக்கு இன்று முதல் விருது


          
    எனது நண்பன் சுரேசுக்கு தான் எழுதிய முதல் நாவல் ஒளிர்நிழல் ,முதல் சிறுகதை தொகுப்பு நாயகிகள்,நாயகர்கள்  ஆகியவற்றுக்காக சிறந்த அறிமுக எழுத்தாளர் விருதை வாசகசாலை, தமிழ் இலக்கிய விருதுகள்  பெருமையுடன் வழங்குவதாக அறிவித்துள்ளது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன் .வாழ்த்துக்கள் சகோதரா .


  சுரேஷை நான் கொல்லிமலையில் ஜெயமோகன் அவர்கள் நடத்திய  புது வாசகர் சந்திப்பில் முதன்முறையாக சந்தித்தேன் .அது முதல் தொடர்கிறது அவருடன்  நட்பு .

  ஜெயமோகனின் தளத்தில் வரும் சுரேசின் கடிதங்களின் மொழி என்னை மெய்சிலிர்க்க வைக்கும் .பெருஞ்சுழி என அவரது இணைய பக்கத்தில் எழுதினார் .
   
அப்போதே என்னையறிந்தவர்களிடம் நான் சொல்லிகொண்டிருந்தேன் .தமிழின் மிக முக்கியமான படைப்பாளி உருவாகிறார் என .
  அதை அவரது முதல் நாவல் ஒளிர்நிழல் உண்மையாக்கியது .

   கடந்த வாரம் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் ஒரு அமர்வில் வாசகர்களை சந்திக்கும் நல்வாய்ப்பை பெற்றார் .அது அவரது முதல் மேடை .என்னால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று .
  
   இந்த வாரம் அவரது முதல் படைப்புக்கான விருதை பெறுகிறார் .நண்பன் சுரேசுக்கு எனது வாழ்த்துகளும் அன்பும் .உனக்கு நண்பன் என்பதில் பெருமைகொள்கிறேன் .
ஷாகுல் ஹமீது ,
23-12-2017

  

Thursday 9 November 2017

காலே-கொழும்பு


               அதிகாலை     (டிசம்பர் 15- 2016 )  இரண்டு மணிக்கே தொலைபேசி சிணுங்கியது .ஆம் ஆறரை மாதங்கள் கப்பலில் வேலை செய்துவிட்டு ஊருக்கு செல்கிறேன்.கப்பல் சவூதி அரேபியாவிலிருந்து ஜப்பானை நோக்கி செல்கிறது .எனது ஊரான கன்னியாகுமரியை கடந்து இலங்கையின் காலே அருகில் வரும்போது கப்பலின் வேகத்தை குறைத்து அருகணைந்த படகில்  என்னையும் ,சமையல்காரர் ஆன்றனியையும்,இறக்கிவிட்டார்கள் .
  இவ்வாறு ஓடிக்கொண்டிருக்கும் கப்பலில் இருந்து இறங்குவது இதுவே எனக்கு முதல் முறை .கப்பலின் வேகத்தை குறைக்க 3 ம் நிலை பொறியாளர் தர்மா இயந்திர அறைக்கு செல்லும் போது  போனில் அழைத்து சொன்னார் .ஷாகுல் புறப்பட தயாராகு என.ஊருக்கு செல்வதற்கு முன்  கடைசி சில இரவுகள் தூக்கமின்றியும் பின் நள்ளிரவில் துயில் கலைவதும்  ,நீராடுவதும் கப்பல் பணியாளர்களுக்கு பழகியே ஆக வேண்டிய கட்டாயம்.
    மூன்றரை மணிக்கு நாங்கள் செல்ல வேண்டிய படகு எங்கள் கப்பலுடன் அருகணைந்தது அது  20மீ  நீளம் கொண்ட மிக சிறிய படகு  நான் பணிபுரிந்தது  240 மீ நீளமும் 36மீ அகலமும் 44576 மெட்ரிக் டன் எடையும் கொண்ட பிரமாண்டமான பெரிய கப்பல்  .  கப்பலும் படகும் மிக குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தது.படகிலிருந்து எனக்கும்,ஆன்றனிக்கும் மாற்று பணியாளர்கள் மேலேறி வரவும் நாங்கள் கீழே இறங்கவும் தடிமனான கயிற்றில் மரகட்டையும் ,ரப்பராலான படிகளால் கட்டியிணைக்கப்பட்ட ஏணியை படகுவரை தொங்க விடப்பட்டுருந்தது ,போசனும் அவரது உதவியாளர்களும் படகிலிருந்து பயணபைகளை கிரேன் மூலமாக மேலேற்றி கொண்டிருந்தனர் .லேசான அலை இருந்ததால் கிரேனை இயக்குவது சற்று கடினம்தான் .
  அலையின் வேகத்துக்கு தகுந்தவாறு அருகணைந்த படகு ஆடி கொண்டும் ,மேலும்,கீழுமாக அலைகழித்துக்கொண்டிருந்தது.ஏணிக்கு இணையான உயரத்தில் படகு அலையில் மேலே வரும்போது தேர்ந்த சர்கஸ்காரனை போல ஏணியை பிடித்து மேலேறி வந்தார் பைக்கியார ராஜன் .
 என்னுடன் முன்பே வேலைசெய்தவர் கேரளாவின் பைக்கியாரா ராஜன்.     பிராமாதமாக சமைப்பார் .நண்பா ஷாகுல் நீ போகிறாயா? என கட்டியணைத்து விடைகொடுத்தார் .தொலைபேசி அட்டையும் ,இணைய அட்டையும் கொடுத்துள்ளேன் வாங்கிகொள் என்றேன் பைக்கியார ராஜனிடம். .
     சோமாலிய கடல் பகுதியில் நாங்கள் சென்றதால் கப்பலில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வீரர்கள் எங்களுடன் பயணித்தனர் .இலங்கையை சேர்ந்த இருவர் ,போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் .அவர்களும் ஆயுதங்களுடன் எங்களுடன் இறங்கினர்.ஜப்பானிலிருந்து சவூதி செல்லும் போது இதே காலேவில் கடந்த மாதம் 23 ம் தியதி அவர்கள் கப்பலில் ஏறிகொண்டார்கள்.
   நானும் ,ஆன்றனியும் ,பாதுகாப்பு வீரர்களும் ஏணியின் வழியாக படகில் பாதுகாப்பாக இறங்கினோம் .பயணப்பைகளும் பாதுகாப்பு வீரர்களின் ஆயுதங்களும் படகில் வந்ததை உறுதிசெய்துவிட்டு சைகை காட்டியதும் கப்பலும் ,படகும் பிரிந்து தாங்கள் செல்ல வேண்டிய பாதைகளில் பயணிக்க தொடங்கியது.கையசைத்து விடை பெற்றோம். சிறிதாகிக்கொண்டே சென்ற கப்பல் கண்களில் இருந்து மறைந்தது . இப்போது ஊருக்கு செல்வது உறுதியாயிற்று.

   முழுநிலவுக்கு  மறுநாள் என்பதால்  பிரகாசமாக ஜொலித்துக்கொண்டிருந்தது நிலா. பயணிகள் படகு அது நாங்கள் யாரும் உள் சென்று இருக்கைகளில் அமராமல்  படகின் பின் பகுதியில் முழுநிலவை ரசித்தவாறு அமர்ந்திருந்தோம் .
 இலங்கை அன்பர்கள் அந்த அதிகாலை நேரத்திலும் தங்கள் கைபேசியில் மூழ்கியிருந்தனர் .கரையை நெருங்கும்போது நிறைய மீன்பிடி படகுகள் கடலுக்குள் சென்றுகொண்டிருந்தது .
 ஒரு மணி நேர பயணத்திற்கு பின் காலே துறைமுகத்தை  வைகரையில் அடைந்தோம் .பகலில் வந்திருந்தால் கரைபகுதியின் அழகை  ரசித்திருக்கலாம் என்றார் என்னுடன் வந்த இலங்கை நண்பர் .
 பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிகள் அடங்கிய பெட்டிகளுடன் வேறு வாகனத்திலும் ,நாங்கள் வேறு வாகனத்திலும் ஏறிகொண்டோம்.முதலில் நான் கண்ட பெயர்ப்பலகை துறைமுக வளகாத்திற்குள்ளிருந்த வைத்தியசாலை.அந்நிய தேசத்தில் தமிழ் பெயர்பலகைகளை காணும்போதும் மனம் உற்சாகமடைந்துவிடுகிறது .
பாதுகாப்பு  வீரர்கள் 

குடியுரிமை ,சுங்க சோதனைகளை முடித்து  வெளியே வரும்போது  எதிரில் இருந்த அரசமரமும் அங்கிருந்த புத்தர் சிலையும் அந்த அதிகாலை நிலவு வெளிச்சத்தில் ஜொலித்துகொண்டிருந்ததை கண்டு மெய் மறந்தேன்.அந்த அரச மரம் இந்தியாவிலிருந்து சென்றதாக இருக்கும் அசோக சக்ரவர்த்தியின்  மகள் சங்கமித்திரை பண்டைய காலத்தில் புத்தரின் செய்தியை கொண்டு அனுராதபுரம் சென்றபோது அரசமரக்கிளை ஒன்றையும் கொண்டு சென்றாளாம் அதன் வழிதோன்றல்கள் தான்  இன்று இலங்கையிலும்,ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறது . இலங்கையில் எல்லா அரசமரத்தடியிலும் புத்தர் சிலை வைக்கப்பட்டு மிக சுத்தமாக பராமரிக்கிறார்கள் .
   .

   அருகிலேயே எங்கள் நிறுவன அலுவலகம், அங்கே எங்கள் பயண பைகளை வேறு காரில் ஏற்றினர் .நன்றாக விடிந்துவிட்டிருந்தது.அங்கிருந்து கொழும்புவுக்கு 116.5 கிலோமீட்டர் தூரம் இரண்டு மணிநேரம் ஆகும் என்றார் ஓட்டுனர் .காரில் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்கள் ஒலித்தன .ஓட்டுனரிடம் தமிழ் தெரியுமா என்றேன் கொஞ்சமாக புரியும் என்றார் .தமிழ் படங்களை விரும்பி பார்பததாகவும் ,விஜய் ,தனுசை  பிடிக்கும் ,தனுசை ரொம்பவே பிடிக்கும் என்றார் .தனுசையா என மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதி செய்து கொண்டேன் . ..
  



காலே –கொழும்பு கார் பயணம் மேற்கு கன்னியாகுமரி மாவட்டம்,கேரளாவில் பயணிப்பது போலவே இருந்தது .சாலைகளில் தமிழ் பெயர்பலகைகள் அதை இன்னும் உறுதி செய்தது .

   கொழும்புவை நெருங்கும்போது காலை நேர பரபரப்பும் ,வாகன நெரிசலும் துவங்கியிருந்தது .இருசக்கர வாகன ஓட்டிகளும் ,பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் பெண்களும் தலைகவசம் அணிந்தே செல்கின்றனர் .சாலையோரத்து வணிக வளாகங்களும் ,கடைகளும் இன்னும் திறக்கவே இல்லை .நிறைய கடைகளுக்கு கண்ணாடி கதவுகளே இருந்தது.          காரோட்டியிடம் கேட்டேன் திருட்டு போவது இல்லையா என .மிக குறைவுதான் அதையும் கண் காணிப்பு கேமரா காட்டி கொடுத்துவிடும் விரைவில் பிடித்துவிடுவர் .அதை கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது .



  
எட்டரைக்கெல்லாம் எட்வர்ட் ஒழுங்கை(Edward lane ) யிலிருக்கும் விடுதியை அடைந்தோம் .உயர்தர நட்சத்திர விடுதி அது .கண்ணாடி அணிந்த இளம்பெண் ஆயுபவன்  என சிறிய பற்கள் தெரிய வரவேற்று கடவுசீட்டை வாங்கி எங்களது அறை சாவிகளை தந்துவிட்டு .பயண பைகள் அறைக்கு வந்துவிடும் நீங்கள் செல்லுங்கள் என்றாள். தமிழ் தெரியுமா என ஆங்கிலத்தில் கேட்டேன் சுமாராக பேசுவேன் நன்றாக புரிந்துகொள்வேன் என்றாள் .
  அங்கிருந்து தொலைபேசியில் என்னுடன் பலமுறை பணிபுரிந்த காப்டன் பெர்னாண்டோவை அழைத்தேன் .ஷாகுல்  நீ வருவதை முன்பே அறிவிப்பதில்லையா என கேட்டார் .மின்னஞ்சல் செய்திருந்தேன் என்றேன் .இதுபோன்ற விசயங்களை போனில் தெரிவிக்க வேண்டுமென்றார்.உன்னை நான் சந்திக்க இயலாது நான் இப்போது அனுராதபுரத்திலிருக்கிறேன்.நேற்று தான் வந்தேன் .உன்னை சந்திக்க முடியாததில் வருத்தம் என்றார் .தொலைபேசியில் தொடர்பில் இருக்குமாறு கேட்டுகொண்டார்.

  எங்களது பைகள் வந்ததும் ஆன்றனி அறைக்கு வந்தார் காலையுணவுக்கு செல்லலாம் என்றார் .உணவு கூடத்திற்கு சென்றோம் .அறை எண்ணை கேட்டுவிட்டு  எங்களை உள்ளே அனுமதித்தனர் .



  

பபே சிஸ்டம் வேண்டியதை சாப்பிடலாம் ஆப்ப சட்டியை பார்த்து கிடைக்குமா என்றேன் .பத்து நிமிடத்திற்குள் சூடாக தந்தனர் . கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு வெளியே செல்லலாம் என அறைக்கு வந்து படுத்தேன் .உடனேயே ஆன்றனி வந்து கதவை தட்டினார் .காலணியும் சில பொருட்களும் வாங்க வேண்டும் வெளியே செல்லலாம் நீயும் வா என்றார் .கடந்த ஆறரை மாதத்தில் எங்கும் வெளியில் செல்லவில்லை எந்த பொருளும் வாங்கியிருக்கவில்லை .
  காலணி கடை அருகிலேயே இருந்தது .ஆனால் அவர்கள் அமெரிக்க பணத்தை வாங்குவதில்லை எங்களிடம் இலங்கை பணம் இல்லை சாலையில் கொஞ்சம் நடந்தோம் .சம்பத் வங்கியை கண்டு நுழைந்தோம் பணம் மாற்ற வேண்டுமென சொன்னோம் .கடவு சீட்டை கேட்டார் வங்கியிலிருந்த பெண்மணி .
  மீண்டும் அறைக்கு வந்து கடவு சீட்டுடன் சென்றோம் நல்ல வெயில் கடல்  அருகில் இருப்பதால் காற்றில் ஈரப்பபதம் காரணமாக உடல் வியர்வையில் நனைந்தது .
  நாங்கள் சென்ற கடையில் உள்ள காலணிகள் ஆன்றனிக்கு பிடிக்கவில்லை நானே பார்த்து வாங்கி கொள்கிறேன் என்றார் .நான் அறைக்கு வந்து படுத்தேன் தூங்கி எழுந்து உணவருந்தி நீர்கொழும்பு போவதாக திட்டம் .

 படுத்த சிறிது நேரத்தில் மீண்டும் ஆன்றனி வா மதிய உணவுக்கு செல்வோம் என்றார்.நான் அப்போது பசியில்லாமலே சென்றேன் .அவருக்கு மாலை நான்கு மணிக்கு செல்ல வேண்டும் இரவு எட்டு மணிக்கு விமானம் .


        Fish combo  எனும் உணவுக்கு ஆர்டர் தந்துவிட்டு கொஞ்சம் பச்சை காய்கள் சாப்பிட்டேன் .கணவாய் ,நண்டு ,இறால் ,லாப்ஸ்டர் பொரித்த மீன் என ஒரு தட்டு நிறைய வந்தது .எனக்கு அது மிக அதிகம் .இவ்வளவு இருக்கும் என எதிர் பார்க்கவில்லை ,கொஞ்சம் வெள்ளை சாதம் வேண்டுமென கேட்டேன் .நல்ல சுத்தமாகவும், சுவையுடன் இருந்தது .
    

     இரண்டு மணிக்கு தூங்கி நான்குக்கு எழுந்து நீராடி அருகிலிருந்த பிம்பிலபட்டி  புகைரத நிலையம் (அங்கு அப்படிதான் எழுதியிருந்தது )சென்றேன்.கடற்கரையை ஒட்டியிருந்தது ரயில் பாதை.நல்ல கூட்டம் பணி முடிந்து ஆண்களும் அழகு பெண்களும் வீடு திரும்பும் நேரம் .

  முதலில் வந்த ரயில் கொழும்பு வரை மட்டுமே என்றனர் .இரண்டாவது வந்த ரயிலில் ஏறிக்கொண்டேன் .ஒன்றேகால் மணி நேரம் என்றனர் அப்போதே மணி ஐந்தேகால் ஆகியிருந்தது .
  ரயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எப் தயாரிக்கப்பட்டது .அங்குள்ள பெயர் பலகைகள் இதுவரை நான் பார்த்திராதது .மலசழ கூடம் என  கழிப்பறையில் எழுதியிருந்ததை கண்டேன் .

  கொள்ளிபட்டி ,கோமாட,மருதான,கந்தான,ஜா-எல எனும் நிலையங்களை கடந்தபின் நீர்கொழும்புவில் இறங்கும்போது இருட்டிவிட்டிருந்தது .
    வெளியில் வந்து ஆட்டோ பிடித்து கடற்கரைக்கு சென்றேன் .ஆட்டோ ஓட்டுனர் கணேசன் தமிழில் பேசினார் .

   கடற்கரை மிக குறைவான கூட்டமே இருந்தது.பெரும்பாலனவர்கள் இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தனர் .கடற்கரையில் ஒரு நீண்ட நடை சென்றேன் .

  வெளிச்சம் குறைவான இடத்தில் இருந்த மீன்பிடி படகில் காதல் ஜோடி ஒன்று ஓருடலாக இருந்தனர் .அவர்களை தொந்தரவு செய்யாமல் விலகியே நடந்தேன் .
  
அங்கிருந்த ஒரு கோயில் மிக அழகிய  வண்ணவிளக்குகளால் அலங்கரித்திருந்தது  என்னை கவர்ந்தது .பௌத்த ஆலயமாக இருக்கலாம் கடலை பார்த்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் .ஆட்டோ இறக்கி விட்ட இடத்திற்கே மீண்டும் வந்து பிரதான சாலையை அடைந்தபோது கேரளாவின் கோவளம் கடற்கரை சாலையில் இருப்பதுபோல உணர்வு .
  வரும்போது ஆட்டோவிற்கு நூற்றிஐம்பது கொடுத்தேன் .இப்போது முந்நூற்றி  ஐம்பது கேட்டான் .வரும்போது நூற்றிஐம்பது  தான் கொடுத்தேன் என கூறினேன் இருநூறு க்கு ஒத்து கொண்டு வந்தார் அவரும் தமிழர் .
  மணி ஒன்பதை தாண்டியிருந்ததால் கொழும்பு  கடைசி ரயிலும் சென்றிருந்தது .பேருந்து நிலையம் சென்றேன் .தனியார் வேன்கள்  இயக்க படுகிறது கொழும்புக்கு  இருபது இருக்கை கொண்ட டோயோட்டோ வேன்.
  நல்ல தரமான சாலை ஒன்றரை மணி நேரத்தில் கொழும்பு .கொழும்பு பேருந்து நிலையத்தை சுற்றி வந்தேன் .ஒரு கறுப்பு டீயும் குடித்தேன் .

  பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தேன் சற்று தூரத்தில் கொழும்பு புகைரத நிலையதிற்கு வெளியில் வீடில்லாத பெரும்பாலானோர் தங்கள் படுக்கையை (படுக்கை என்பது ஒரு துண்டு துணிதான் )விரித்து துயில தொடங்கியிருந்தனர் .மழை காலத்தில் இவர்கள் எங்கு படுப்பார்களோ ?

 
     

  

  அங்கிருத்த ஒரு சலூனில் முடி வெட்டி ,முக சவரம் செய்துகொண்டேன் .இலங்கை பணத்திற்கு முந்நூறு கொடுத்த நினைவு .
  அங்கிருந்து பேருந்தில் எனது விடுதியறையை அடைந்தேன் .மதியம் நல்ல மீன் உணவு சாப்பிட்டதில் இரவுணவு தேவைபடவில்லை .
  குளித்து முடித்தபோது வரவேற்பறையில் இருந்து போனில் அழைத்தார்கள் காலை உங்களை அழைத்துசெல்லும் கார் நான்கரை மணிக்கு வருமென .

    குளித்து கொண்டிருக்கும்போது எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் நினைவு வந்து .அவர் பெரும்பாலும் பயணங்களில் புதிய ஊரில் இரவில் நீண்ட நடை செல்வார் .
  மணியை பார்த்தேன் பனிரெண்டு ஐ நெருங்கியிருந்தது .கீழே வந்து பிராதன சாலையில் ஒரு கருப்பு டீ குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன் .கொஞ்ச தூரம் வந்தபின் பிராதன சாலையிலிருந்து விலகி கடற்கரையும் ,ரயில் பாதையும் அதை ஒட்டிய சாலையில் தந்தந்தனியே நடக்க ஆரம்பித்தேன் .அந்நிய தேசத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை .சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை  ஒரு இருசக்கர வாகனமும் ,ஒரு ஜீப்மும் மட்டுமே சென்றது .

   பயமின்றி நள்ளிரவில் உள்ளுரிலேயே தனியாக நடப்பது சாத்தியமில்லை .மிக பாதுகாப்பான ஊர் இது என நினைத்துகொண்டேன் .மெக்ஸிகோவின் வெராகூருஸ் லிம் நள்ளிரவில் தனியாக நடை சென்ருக்கிறேன் .
  மீண்டும் பிராதன சாலைக்கு வந்து விடுதிக்கு செல்லும் பாதையில் நடந்தேன் .பூட்டியிருந்த நிறைய வணிக வளாகங்கள் கண்ணாடி மட்டுமே இருந்தது .உள்ளே உள்ள பொருட்களை பார்க்கவும் முடிந்தது எனக்கு வியப்பாய் இருந்து .
  
இரவில் கண்ணாடி கதவால் மட்டுமே பூட்டிய கடை 
  முதலில் தேநீர் குடித்த அதே கடையில் மீண்டும் ஒரு கறுப்பு டீ குடித்துவிட்டு .அறைக்கு சென்று வரவேற்பறையில் காலை மூன்றரைக்கு என்னை எழுப்ப சொல்லிவிட்டு உடல் கழுவி படுக்கையில் ஒரு மணி .
 காலை எழுந்து நான் நீராடி முடித்தபின் தான் வரவேற்பறையிலிருந்து அழைத்தார்கள் .கார் வந்ததும் அழைக்க சொன்னேன் கார் முன்னரே வந்துவிட்டது என்றனர் .
   
       ஓட்டுனர் சபீக் இரவிலேயே வந்து விடுதிக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு  அதிலேயே தூங்கியுள்ளார் .காலையில் எக்காரணத்தை கொண்டும் தாமதமாக கூடாது என்பதற்காக .

     ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்றார் .சீனா இப்போது இங்கு தரமான சாலைகளை போட்டு தந்துள்ளனர் .முன் இருக்கையில் அமர்ந்ததும் சீட் பெல்டை அணிந்து கொள்ள சொன்னார் .வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை தவறாமல் கடைபிடிப்பதை கேட்டேன் சபீக்கிடம் .ஆம் இங்கு வாகன போக்குவரத்து சட்டங்கள் சற்று கடுமையாக இருக்கிறது என்றார் .குடித்துவிட்டு ஓட்டினால் என்ன தண்டனை என கேட்டேன் .கேள்வியே இல்லை உரிமம் ரத்து செய்யப்படும் .

   உரிமம் ரத்தா அப்படியெனில் யாரும் நினைத்துகூட  பார்க்கமாட்டார்கள் என நினைத்துகொண்டேன் .அதிகாலை சாலையில் வாகனங்கள் இல்லை .எங்கள் முன் ஒரு போலிஸ் ரோந்து வாகனம் மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தது .அதை நாங்கள் முந்தி சென்றோம் .நெடுஞ்சாலை முடிவில் உள்ள சுங்க சாவடியில் நாங்கள் நின்றபோது போலிஸ் ஒருவர் வந்து வண்டியை ஓரமாக நிறுத்தசொன்னார் .
 எதோ இரவு நேர சோதனை என நினைத்து கொண்டேன் .நான் இறங்கவேண்டுமா என சபீக்கிடம் கேட்டேன் வேண்டாம் என்றார்.
  ஐந்து நிமிடந்தில் வந்து விட்டார் .எங்கள் வண்டியில் பின்னால் இருந்த ஒரு சிகப்பு விளக்கு எரியவில்லை அதற்காக ஆயிரம் ரூபாய் அபதாரம் அன்று மாலைக்குள் அதை சரி செய்திருக்க வேண்டுமென கட்டளை .நாங்கள் முந்தி வந்த போலிஸ் வாகனம் தான் அது .சுங்க சாவடி வரை எங்களை பின் தொடர்ந்து வந்திருக்கிறார் குறைந்தது ஆறேழு கிலோமீட்டர்கள்.
  
    விமான நிலையத்தை சீக்கிரமாகவே வந்துவிட்டோம் .சபீக் பயண பைகளை இறக்கிவிட்டு சவாரி முடிந்ததற்கான படிவத்தில் கையொப்பம் பெற்று சென்றார் .


   ஸ்ரீ லங்கன் ஏர் லைன்ஸ் விமானம் ஏழே  முக்காலுக்கு .முன்பே இணையத்தில் இருக்கை பதிவு செய்திருந்தேன் .அதனால் அவசரமின்றி பொறுமையாக சென்றேன் .ஐம்பது நிமிட பயணம் மட்டுமே கொழும்புவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு .இதுதான் என் வாழ்வில் மிக குறைந்த நேர விமான பயணம் எந்த கடினமும் இல்லை .ஏறும் போதே அடுத்த ஒருமணி நேரத்தில் இறங்கிவிடுவோம் என்பதால் கூடுதல் உற்சாகம் .சௌதியிலிருந்து விடுமுறைக்காக ஊருக்கும் செல்லும் குமரி மண்ணின் மைந்தர்கள் விமான நிலையத்தில் நண்பர்கள் ஆகியிருப்பார்கள் போல கேலியும் கிண்டலுமாக பேசி கொண்டு அந்த காலை எட்டுமணிக்கே விமான பணிப்பெண்னிடம் ஆளுக்கு இரண்டு பீர் வாங்கி குடித்தனர் .

ஸ்ரீலங்கன் ஏர் லயன்சின் விமான பணிப்பெண்கள் மிக அழகாக சேலை கட்டியுருந்தனர் .ஆரல்வாய்மொழியில் காற்றாடிகள் சுழல்வதை விமானத்தில் இருந்து பார்க்கும்போது வீட்டிற்கு அருகில் பறந்துகொண்டிருக்கிறேன் எனும் உற்சாகம் . மகன்களுக்கு அரையாண்டு தேர்வு அதனால் சுனிதாவும் குழந்தைகளும் விமான நிலையம் வரவில்லை .

    நண்பர் நாகராஜனை அழைத்தேன்.பணிகளுக்கிடையில் விமான நிலையம் வந்திருந்தார் .என்னுடன் பயணித்த ஸ்ரீநிவாஸ் தந்தை மலையாளி ,தாய் இலங்கை .தந்தை பஹ்ரைன் நாட்டில் வேலைசெய்தபோது திருமணம் செய்து கொண்டாராம் .தந்தைக்கு உடல் நலமில்லாமல் இருப்பதால் பெற்றோருக்கு தெரியாமல் ஊர் வருகிறான்.அவர் கருநாகப்பள்ளி செல்ல வேண்டும் அவனை தம்பானூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு ஊர் போய் சேர்ந்தோம் .எப்போதும் என்னை அழைத்து செல்ல வரும் பாஸ்கரன் அண்ணனின் வாடகைக் காரில் .
  

Sunday 5 November 2017

எனது தந்தை காலமானார்


  கடந்த(4-11-2017) சனிகிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு எனது தந்தை உடல் நல குறைவினால் காலமானார். அன்னாருக்கு என்பது வயதிருக்கும் .கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி படுக்கையில் இருந்தார்.

 அவரது நல்லடக்கம் எங்கள் சொந்த ஊரான மாணவாளகுறிச்சியில் நாளை (06-11-2017)திங்கள் காலை பத்துமணியளவில் நடைபெறும் .

  தற்போதுநாகர்கோவில் அருகில் வெள்ளாடிச்சி விளையில் உள்ள  எனது தம்பி ஷேய்க் இன் வீட்டில் அன்னாரது  ஜனாஸா ( உடல்) வைக்க பட்டுள்ளது என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் .

ஷாகுல் ஹமீது
05-11-2017

Tuesday 24 October 2017

பனாமா -திருவனந்தபுரம் ஐம்பது மணி நேரம்.

அது 2008 ம் ஆண்டு ஐஜின் எனும் கார்கள் ஏற்றும் கப்பலில் பயிற்சி பிட்டராக டெக்கில் பணியாற்றினேன் .(2008 –மார்ச் முதல் ஆகஸ்ட் வரை)
சிங்கப்பூரிலிருந்து மார்ச் மாதம் சக பிட்டரான பிரினெல் டி சில்வா வுடன் ஏறினேன் .

   சிங்கப்பூர் வந்திறிங்கிய போது கப்பல் தாமதமானதால் விடுதியில் தங்கியிருந்தோம் .அதற்க்கு முந்தைய கப்பலில் இருந்தபோது மலேசியாவில் செய்யதலி அண்ணன் வீட்டில் அறிமுகமான நண்பர் மணியை அழைத்தேன் மாலையில் அவர் குடும்பத்துடன் விடுதியறைக்கே வந்து சந்தித்தார் .

 சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்தின் லாம்ச்சபாங் நகரில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் யார்டில் பதிமூன்று நாட்கள் பாராமரிப்பு பணிகள் செய்துவிட்டு அங்கேயே கார்களை ஏற்றி விட்டு நீண்ட(26நாட்கள்) பயணமாக சிலி நாட்டின் (santiago )தலை நகரான சான்டியாகோவிலுள்ள துறைமுகத்தை அடைந்தோம் .

 பின்னர் கப்பல் அங்கிருந்து  குவாதமாலா,ஹோண்டாருஸ்,எல்சால்வர் ,நிராகுவா ,ஈக்குவாடோர்,கொலம்பியா ,மேக்ஸிகோ என ஓடியது .ஜூன்,ஜூலை மாதங்களில் சிலி யில் குளிர் காலம் பத்து நாட்கள் பயணத்தில் கப்பல்  மெக்ஸிகோவை அடைந்துவிடும் அங்கு கடும் வெப்பம் .

 ஈக்குவடாரை நெருங்கியதுமே வெப்பம் அதிகரித்துவிடும் .இருந்தாலும் மனதை மயக்கும் ஊர்கள் மெக்ஸிகோவின்  அக்கபுல்கோ ,மன்சநிலோ ,லார்சனோ கார்டினேஷ் .மறுபக்கம் வெராக்ருஸ் .
  ஆகஸ்ட் மாதம் பானாமாவின் பல்போவா துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறங்கினோம் .நான் ,பிட்டர் மனோஜ் உட்பட ஏழு பேர் .ஐந்து பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் .எனக்கும் மனோஜூக்கும் அன்றிரவு எட்டரை மணிக்கு விமானம் பானாமாவின் தலைநகரான பனாமா சிட்டியிலிருந்து .
மற்றவர்களுக்கு மறுநாள் காலை விமானம் ஆதலால் விடுதிக்கு வேறு காரில் சென்றனர் .

 குறைவான நேரமே எங்களுக்கு இருந்தது மயாமி செல்லும் விமானத்தை பிடிப்பதற்கு .ஏஜென்டின் மனைவி எங்களை விமான நிலையம் அழைத்துசெல்ல  காரோட்டி வந்திருந்தாள் .பேச்சு கொடுத்தேன் குழந்தைகள் இருக்கிறதா? இரண்டு குழந்தைகள் .இப்போது நான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக சொன்னாள்.கார் சற்று மெதுவாக செல்வதற்கான காரணம் அப்போதுதான் புரிந்தது .வழியில் எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லாததால் சிக்கலன்றி ஆறரை மணிக்கு வந்தடைந்தோம் .

 பனாமா சிட்டி விமான நிலையத்தில் எங்களையும்,பயண பைகளையும் இறக்கிவிட்டு விடைபெறுகிறேன் என்றாள் பற்கள் தெரிய, நானும் மனோஜும் நன்றி கூறி  புன்னகைத்தோம்  . இரண்டு மணிநேரம் சர்வதேச விமானத்தை பிடிக்க மிக குறைவு
விமான நிலையத்தின் உள்ளே சென்றதும் ராணுவ உடையணிந்த வீரர்கள் இருவர் இடுப்பளவு உயரமுடைய ஒரு நாயுடன் வந்தனர் .வீரர்கள் எங்கள் பயண பைகளை கை சுட்டினர் .அந்த நாய் எங்கள் பைகளை உஸ்,உச ,உஸ் என மோப்பம் பிடித்தது .
பின் எங்களை உள்ளே செல்லுமாறு வீரர்கள் கையசைத்தனர் .பயண பைகளை எக்ஸ் ரே இயந்திரத்தில் சோதனையிடவில்லை.

     இருக்கை சீட்டு வாங்கும் இடத்தை கண்டடைந்து  பயண பைகளை அளித்துவிட்டு அங்கிருந்து மயாமி-நியூயார்க் –மும்பைக்கான இருக்கை சீட்டுகளை தந்துவிட்டு நியூயார்க்கில் எங்களது பைகளை எடுத்து மீண்டும் அடுத்த விமானத்தில் ஒப்படைக்குமாறு சொன்னாள் அங்கிருந்த பெண் .கடவு சீட்டில் அமெரிக்க விசா இருப்பதை சரிபார்த்தபின்னரே எங்களை பயணம் செய்ய அனுமதித்தாள் கோபா விமான பணிப்பெண்  கருப்பழகி.   நம்மூர் கருங்கல் சிலை போல .

  சிறுநீர் கழிக்க இயற்க்கை உந்தியது கட்டுபடுத்த இயலாதவாறு ,அவசரமாக ஓடினேன் சிறுநீர் கழித்தபின் தான் கவனித்தேன் இங்கெல்லாம் கழிப்பறைகளில் தண்ணீர் இருக்காது என்பதை  அதற்கு பிறகான தொழுகைகள் இயலாமல் போய்விட்டது .

  நானும் மனோஜும் நாங்கள் செல்லவிருக்கும் விமானத்தின் வாயிலை கண்டடைந்து காத்திருந்தோம்  வாயில் திறந்து பயணிகளை விமானத்தில் ஏற அனுமதித்ததும்  உள்ளே நுழைந்தோம் .
நள்ளிரவிற்கு பின் மயாமி விமான நிலையத்தை அடைந்தோம் .அடுத்த விமானம் நியூவார்க் நகரிற்கு, காத்திருந்தோம்  .அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தே இருவரும் சற்று கண் அயர்ந்தோம் .

 அதிகாலை மீண்டும் இயற்கை  உந்துதல் வயிறு லேசாக வலித்தது .தண்ணீர் பிடித்து செல்ல குப்பைதொட்டிகளை துளாவினேன் போத்தேல் களை தேடி அப்போதுதான் அனைத்து குப்பைதொட்டிகளையும்  காலி செய்து புதிய பாலித்தீன் உறைகளை மாற்றியிருந்தனர் பணியாளர்கள் .
  சிறிது நேரம் காத்திருந்தேன் ஒருவர் பழசாறு போத்தலை குப்பைதொட்டியில் போட்டார் அதை எடுத்து கொண்டு தண்ணீர் பிடித்து கழிவறை சென்று வந்தேன்.உடலும் மனமும் சற்று தளர்வானது.எப்போதுமே கழிவுகள் வெளியேறும்போது ஒரு சுகம் .

  ஏனோ வெளிநாட்டினரை போல் காகிதத்தால் துடைக்கும் பழக்கம் நம்மால் இயலவில்லை. மனோஜிக்கு எந்த பிரச்னையும் இல்லை பல் தேய்க்க மட்டும் ஒருமுறை போய் வந்தான் . இளம் பெண்கள் மூவர் தள்ளாடியபடி அருகிலிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர் .மனோஜ் அந்த மூவரும் குடி போதையில் கழிவறையில் வாயுமிழ்ந்து கொண்டிருந்ததாக சொன்னான் .
 அடுத்த விமானத்துக்கான நேரம் வரும் வரை தூங்கிகொண்டே இருந்தான் .

 அடுத்து செல்லவேண்டிய நியூவார்க் விமானத்தில் ஏறி கொண்டோம் .எனக்கும் மனோஜிக்கும் வேறு வேறு இருக்கைகள் .என்னருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான் .சற்று நேரத்தில் நடு வயதுடைய பெண்மணி அவனிடம் பயப்படாமல் பாதுகாப்பாக இருக்குமாறும் இருக்கை பெல்ட்டை எப்படி அணிவது என்றும் சொல்லிகொண்டிருந்தாள்.நான் அவளிடம் உன் மகனா என கேட்டேன் .ஆம் என்றாள். இந்த இருக்கையில் அமர்கிறாயா ?என்றதும் கண்கள் விரிய அவள் முகம் மலர்ந்தது .

 ஆனால் என் இருக்கை இதுபோல் ஜன்னலோர இருக்கையல்ல அதில் போக உனக்கு விருப்பமா என கேட்டாள்.அதனாலென்ன நீ உன் மகனுடன் பயணம் செய் என்றேன் .மகிழ்ச்சியுடன் என் கைகளை பற்றி நன்றி சொல்லி அவளது இருக்கைக்கு அருகில் என்னை அழைத்துசென்று  காண்பித்தாள்.மூன்று இருக்கைகள் கொண்ட வரிசையில் எனக்கு கடைசி இருக்கை என்னருகில் இடப்புறமான நடு இருக்கையில் விமான நிலையத்தில் நான் கண்ட மூன்று போதை பெண்களில் ஒருத்தி தொடை தெரிய அமர்ந்திருந்தாள்.

 வலப்புற நடை பாதையை ஒட்டிய இருக்கையில் அவளின் தோழி நல்ல நிறம் .இவள் கறுப்பு.விமானம் சென்று கொண்டிருக்கையில் எனக்கு தண்ணீர் தந்த விமான பணிப்பெண் கைதவறி தண்ணீரை  என் மீது கொட்டி விட்டாள் .பல முறை சாரி ,சாரி என சொல்லிவிட்டு காகிதத்தால் துடைத்துவிட்டாள் ஈரமான இருக்கையை .
  என்னருகில் இருந்தவள் எனக்கும் பேப்பர் கொடு இங்கும் தண்ணீர் கொட்டிவிட்டது என்றாள் சினத்துடன் .

 சற்று நேரத்திற்கு பின் இயல்பாக வலப்புறம் திரும்பினேன் அந்த இருக்கையில் இருந்த பெண் மேலாடையின்றி இளமுலைகள் தெரிய துயிலில் இருந்தாள் நான் திரும்பிய அதே கணம் அவளும் திரும்ப  விழிகள் சந்தித்தபின்னரே தன் மார்பகங்களை குனிந்து பார்த்தவள் அவசரமாய் திகைப்புடன்  கிழே விழுந்திருந்த தேங்காய்துருவல் துண்டை எடுத்து  போர்த்திகொண்டாள்.
 அதன் பின் நான் அவளை பார்க்கவேயில்லை .

நியூவார்க் விமான நிலையத்தில் எங்களது  பைகளை எடுக்க சொல்லி விமான பணிப்பெண் சொன்னாள் .இங்கே குடியுரிமை சோதனையும் இருந்தது .

  நியூவார்க் விமான நிலையத்தில் பத்து மணிநேர காத்திருப்பு .விமான நிலையத்தில் இருந்த கடையில் பழம் வாங்க சென்றேன் கடைகாரர் ஒரு பழம் ஒரு டாலர் என்றார் .என்னையறியாமலே இரண்டு பழம் வாங்கினால் இரு டாலர்களா? என தமிழில் கேட்டேன் .அவர் புன்னகைத்தவாறே இந்தியாவிலிருந்து வருகீர்களா என்றார். (எனக்கும் ஆச்சரியம் தான் எப்படி அந்நேரம் தமிழ் என் வாயில் வந்தது என .)தன்னை அறிமுகபடுத்திகொண்டு இலங்கை தமிழில் பேசினார் .ஆறு பழங்களை பையில் போட்டு தந்தவர் காசு வாங்க மறுத்துவிட்டார்.

  அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தே தூங்கினோம் .பத்து மணி நேர காத்திருப்பு சற்று அவஸ்தைதான் .மதிய உணவு நெருங்கியபோது மனோஜ் அந்த தமிழரிடம் வாங்க வேண்டாம் அவர் காசு வாங்க மாட்டார் எனவே வேறு கடையில் இரு பர்கர்கள் வாங்கி கொறித்து கொண்டோம் மதிய உணவாக .
மாலையில் தேனிருக்கு மீண்டும் இலங்கை தமிழரின் கடைக்கு சென்றோம் எனக்கு கறுப்பு டீயும் மனோஜிக்கு காபியும் இரு காகித குவளைகளில் தந்துவிட்டு அதற்கும் காசு வாங்க மறுத்து விட்டார் எப்போது உங்கள் விமானம் என கேட்டார் .

 தேநீர் அருந்துகையில் தெனிந்திய முகம் ஒன்று அருகில் இருப்பதை கண்டு புன்னைகையுடன் என்னை அறிமுகம் செய்து கொண்டு உரையாடினேன் .
அவர் மலையாளி கொச்சி சொந்த ஊர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிப்பதாக சொன்னார் எட்டு ஆண்டுகளுக்கு பின் தந்தையை காண்பதற்காக ஊருக்கு செல்வதாக சொன்னார் .உனக்கு எப்படி மலையாளம் தெரியும் என கேட்டார் .

 இங்கே குடும்பத்துடன் வசித்தாலும் அவரும் மனைவியும் சந்திப்பது பெரும்பாலும் சாலையில்தான் .அவருக்கு இரவு பணி ,மனைவிக்கு பகல் நேர பணி .மனைவி பணி முடிந்து வீடு திரும்புகையில் இவர் பணிக்கு செல்ல வேண்டும் .

  சாலையில் இவர்கள் இருவரும் சந்தித்து கொள்வார்களாம் .என்னடா கொடுமை என நினைத்துகொண்டேன் .அந்த குறுகிய நேரத்தில் என்ன பேசிகொள்வார்களோ?

அவரும் நாங்கள் செல்லும் அதே நியூவார்க்-மும்பை விமானத்தில் பயணம் .பயண நேரம் நெருங்கியதும் விமானத்தில் அமர்ந்தோம் .இரவு எட்டுமணிக்கு புறப்படவேண்டிய விமானம் தாமதமாகவே புறப்பட்டது  அதிகமான விமானங்கள் தரை இறங்கிக்கொண்டே இருந்தது ஓடு தளத்தின் அருகின் எங்கள் விமானத்தை அரை மணிநேரம் நிறுத்தி வைத்திருந்தனர் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தேன் .மூவர் அமரும் இருக்கையில் நானும் மனோஜும் மட்டுமே .
  விமானம் பறக்க தொடங்கியதும் அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை தெரிகிறதா என பார்த்தேன் .மனோஜ் கண்ணாடியை உடைத்து விடாதே என்றான் .

  இரவுணவு விமானத்தில் நல்ல சைவ உணவு வெற்றிலை பாக்கு போல தரும் அளவு தான் மிக குறைவு .இரவுணவு முடிந்ததும் அதே போல் மேலும் ஒரு உணவு பொதியை தந்துவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டனர் .மனோஜ் என் தொடைகளில் கால்களை நீட்டி படுத்து கொண்டான் .பெரும்பான்மையோர் நல்ல துயிலில் இருப்பது போல தோன்றியது .
 நான் சிறிது அமர்ந்தே துயின்றேன் .நீண்ட பயணம் குறுகலான இருக்கைகள் என்னால் சரியாக அமரவே இயலவில்லை .இரண்டு மணி நேரத்திற்கு பின் விமானத்தின் பின் புறம் போய் நின்றுகொண்டேன் .அங்கே அடிக்கடி தேநீரும் கிடைத்தது .

மும்பையை சேர்ந்த தமிழர் செந்தில்குமார் என்னை போலவே தூக்கமின்றி பின்பக்கம் வந்தார் .அறிமுகமானதும் என் இருக்கை காலியாக இருக்கிறது  அங்கிருந்து பேசுவோம் என சொன்னார் .
 அவர் ஆறு ஆண்டுகள் நியூயார்க் இல் வேதியியலில் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்து விட்டு தாயகம் திரும்புவதாக சொன்னார் .நியூமரலோஜி யிலும் தேர்ந்தவர் என்றார் .

எனக்கு அதற்க்கு முந்தைய ஆண்டு இருந்த தோல் வியாதி பற்றி அவரிடம் கூறினேன் .எனது பிறந்த தேதியை கேட்டுவிட்டு முற்றிலும் மாற்றிவிட முடியாது .எனினும் உணவு கட்டுபாடு மற்றும் சில பயிற்சிகளால் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றார்.

 மொத்த பயண நேரத்தில் ஆறேழு மணி கழிந்தபின் மீண்டும் என் இருக்கைக்கு சென்று கொஞ்சம் துயின்றேன் .விழித்தபின் மீண்டும் பின்னால் போய் நின்று கொண்டேன் .இப்போது விமான பணிபெண்கள் கொஞ்சம் புன்னகைத்தனர் இருக்கையில் சென்று அமருங்கள் என சொல்லவில்லை . கேட்ட போதெல்லாம் கறுப்பு டீ தந்தனர் .

  இரவில் புறப்பட்டோம் வழிநெடுகிலும் கண்ணாடி வழி பார்த்தேன் இரவாகவே இருந்தது .பனிரெண்டு மணிநேரம் ஆனதும் விமானத்தின் விளக்குகளை எரியவிட்டனர் .பணிபெண்கள் அணி செய்து உதட்டு சாயம் பூசி வெண்ணிற பற்கள் தெரிய பிரேக் பாஸ்ட் என்றனர் .
காலை உணவு  ரொட்டியும் ,வெட்டிய பழத்துண்டுகளும் ,வெண்ணையும் ,ஜாமும் ,உடைத்த முட்டையை கலக்கி ஆவியில் வேக வைத்ததும் .வீட்டுக்கு போய் மீன்கறி வெச்சி சாப்பிட்டாதான் வயிறு நெறையும் என நினைத்துகொண்டேன்.

  உணவு உண்டு பணிபெண்கள் அவசரமாய் பயணிகளிடமிருந்து உண்ட மிச்சத்தையும் ,காலி தட்டுகளையும் அப்புறபடுத்தியபின் .விமான ஓட்டியின் அறிவிப்பு .இன்னும் அரை மணி நேரத்தில் நாம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறங்க போகிறோம்.அங்கெ உள்ள வெப்பநிலை 27 டிகிரி என .நான் கடிகாரத்தின் நேரத்தை இந்திய நேரப்படி மாற்றினேன் இரவு ஒன்பது மணி அப்போது .
 நீண்ட நெடிய  பயணம் முதன் முறையாக பதினான்கு மணிநேரம் விமானத்தில்.

ஒன்பதரைக்கு மும்பையில் விமானம் இறங்கியது .நானும் மனோஜும் வெளியே வந்தோம் .மனோஜின் மனைவி வந்திருந்தார் .நான் எனது அறையின் நண்பர்கள் மைகேல் மற்றும் மாயாவியை வரசொல்லியிருந்தேன்.அவர்கள் நண்பர் நித்யாவின் காரில் வந்திருந்தனர் .மனோஜிடம் விடை பெற்று சற்று தள்ளி நண்பர் நித்யாவின் கார் நின்ற இடத்திற்கு நடந்தே சென்றோம் .

  இரவு பதொனொரு மணியிருக்கும் அறை சென்று சேரும்போது.குளிக்க தண்ணீர் இல்லை கை கால் கழுவினேன்.எனது பகல் ஒரே நாளில் இரவாகிவிட்டது.கையில் இருந்த மெல்லிய போர்வையை தரையில் விரித்து படுத்தேன் .பத்துக்கும் மேற்பட்டவர்கள் தூங்கி கொண்டிருந்தனர் .தூக்கமே இல்லை இரவு முழுவதும் .

  அதிகாலை மூன்று மணிக்கு மேல் ஒரு மணிநேரம் துயின்றிருப்பேன் .நான்கரைக்கு எழுந்து நன்றாக குளித்தேன் தண்ணீர் வந்து கொண்டிருந்தது .தண்ணீர் பிடிக்கும் ஒருவரை தவிர அனைவரும் தூக்கத்தில் இருந்தனர் .அருகிலிருந்த பள்ளிவாசலுக்கு காலை தொழுகைக்கு சென்று வந்தேன் .

 திரும்பி வரும்போது அரையிருள் அறை நண்பர்கள் சிலர் விழித்திருந்தனர் .தேநீர் அருந்தலாம் என வெளியில் சென்றோம்.உம்மாவிற்கும் ,சுனிதாவிற்கும் அழைத்து சொன்னேன் .
 அடுத்த விமானம் காலை பத்து மணிக்கு மும்பையிலிருந்து –திருவனந்தபுரதிற்கு உம்மாவிடம் சோறும் மீன் கறியும் கொண்டு வர சொன்னேன் .

ஏழரைக்கு அறையிலிருந்து புறப்பட்டோம் நித்யாவே வந்திருந்தார் .மாயாவி என்னுடன் விமான நிலையம் வந்தார் .காரிலிருந்து இறங்கும்போது நடிகர் டில்லி கணேஷ் விமான நிலைய வாயிலில் நின்றுகொண்டிருந்தார் .

 ஜெட் ஏர் வேய்ஸ் விமானம் .தமாதமாக புறப்பட்டது நாற்பத்தைந்து நிமிடங்கள் .திருவனந்தபுரம் செல்லும் உள்ளூர் விமானத்தில் எப்போதும் ஜன்னலோர இருக்கை கேட்டு பெற்று கொள்வேன் .விமானம் இறங்குகையில் கடற்கரையும் ,அந்த செம்மண் நிறமும் அடர்ந்த பச்சையான தென்னைமரங்களும் காண்கையில்  ஒரு உற்சாக மனநிலை தானாகவே வரும் .

  தரை இறங்கும்போது மணி பனிரெண்டே முக்கால் ஆகியிருந்தது .பல்போவாவில் புறப்பட்டு ஐம்பது மணி நேரத்துக்கும் மேல் அதிகமாகியிருந்தது .சாலிமும் ,ஷேய்க் ம் ,சுனிதாவும் ,மாமியும் உம்மாவும் வந்திருந்தனர் .ஷேய்க் கார் ஓட்டினான் .வழியில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உம்மா கொண்டு வந்திருந்த சுவையான மீன்கறியும் சோறும் தின்றோம் .


  இரு நாட்களுக்கு பின் இப்போதுதான் என் வயிறு நிறைந்தது .

ஷாகுல்  ஹமீது